×

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ-க்களின் விடுதி அறைகளுக்கு சீல்வைப்பு

சென்னை: தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ-க்களின் விடுதி அறைகளுக்கு சீல்வைக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள வாடகையை செலுத்துமாறு தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்களுக்கு சட்டப்பேரவைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரத்தில் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து, தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேருக்கும் சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன், நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உத்தரவிட்ட நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான சலுகைகளைப் பெற தகுதியை இழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்எல்ஏ-க்கள் தங்கும் விடுதியிலும் தங்குவதற்கு அனுமதியில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதிநீக்கம் செய்யப்பட்டும் எம்எல்ஏ-க்கள் விடுதியை காலிசெய்யாததால், சபாநாயகரின் உத்தரவின்பேரில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு பூட்டி சீல்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விடுதி நிர்வாகத்துக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து, கீழ்நிலை செயலாளர் முன்னிலையில் தங்களது பொருட்களை எடுத்துச் செல்லுமாறும் நிலுவையில் உள்ள வாடகையை உடனடியாக செலுத்துமாறும் அந்தக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Disqualification, 18 MLAs, accommodation room, sealing, Dinakaran
× RELATED மதுராந்தகம் அருகே லாரி மீது ஆம்னி...